திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.74 நெஞ்சம் ஈசனை நினைந்த - திருநேரிசை
முத்தினை மணியைப் பொன்னை
    முழுமுதற் பவள மேய்க்குங்
கொத்தினை வயிர மாலைக்
    கொழுந்தினை அமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக்
    கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்சம்
    அழகிதா நினைந்த வாறே.
1
முன்பனை யுலகுக் கெல்லாம்
    மூர்த்தியை முனிக ளேத்தும்
இன்பனை இலங்கு சோதி
    இறைவனை அரிவை யஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக்
    களிற்றினை யுரித்த எங்கள்
அன்பனை நினைந்த நெஞ்சம்
    அழகிதா நினைந்த வாறே.
2
கரும்பினு மினியான் றன்னைக்
    காய்கதிர்ச் சோதி யானை
இருங்கட லமுதந் தன்னை
    இறப்பொடு பிறப் பிலானைப்
பெரும்பொருட் கிளவி யானைப்
    பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
    அழகிதா நினைந்த வாறே.
3
செருத்தனை யருத்தி செய்து
    செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
கருத்தனைக் கனக மேனிக்
    கடவுளைக் கருதும் வானோர்க்
கொருத்தனை யொருத்தி பாகம்
    பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்சம்
    நேர்பட நினைந்த வாறே.
4
கூற்றினை யுதைத்த பாதக்
    குழகனை மழலை வெள்ளே
றேற்றனை இமையோ ரேத்த
    இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை அடிய ரேத்தும்
    அமுதனை அமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்சம்
    நேர்பட நினைந்த வாறே.
5
கருப்பனைத் தடக்கை வேழக்
    களிற்றினை யுரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி
    வியன்கயி லாய மென்னும்
பொருப்பனைப் பொருப்பன் மங்கை
    பங்கனை அங்கை யேற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்சம்
    நேர்பட நினைந்த வாறே.
6
நீதியால் நினைப்பு ளானை
    நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்க வெண்ணீற்
    றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா
    விளக்கினை அளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்சம்
    அழகிதா நினைந்த வாறே.
7
பழகனை யுலகுக் கெல்லாம்
    பருப்பனைப் பொருப்போ டொக்கும்
மழகளி யானை யின்றோல்
    மலைமகள் நடுங்கப் போர்த்த
குழகனைக் குழவித் திங்கள்
    குளிர்சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்சம்
    அழகிதா நினைந்த வாறே.
8
விண்ணிடை மின்னொப் பானை
    மெய்ப்பெரும் பொருளொப் பானைக்
கண்ணிடை மணியொப் பானைக்
    கடுவிருட் சுடரொப் பானை
எண்ணிடை யெண்ண லாகா
    இருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்சம்
    அழகிதா நினைந்த வாறே.
9
உரவனைத் திரண்ட திண்டோள்
    அரக்கனை யூன்றி மூன்றூர்
நிரவனை நிமிர்ந்த சோதி
    நீண்முடி யமரர் தங்கள்
குரவனைக் குளிர்வெண் டிங்கள்
    சடையிடைப் பொதியும் ஐவாய்
அரவனை நினைந்த நெஞ்சம்
    அழகிதா நினைந்த வாறே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com